×

5 லட்சம் கேட்டு ஆட்டோவில் கட்டிட மேஸ்திரி கடத்தல் ரவுடி கும்பல் 3 பேருக்கு தனிப்படை போலீசார் வலை

வேலூர், மார்ச் 20: வேலூரில் ₹5 லட்சம் கேட்டு கட்டிட மேஸ்திரியை 3 பேர் கொண்ட ரவுடி கும்பல் ஆட்டோவில் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் சத்துவாச்சாரி வ.உ.சி. நகரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ரமேஷ்(42). இவர் மாட்டு வண்டியிலும் மணல் அள்ளுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பகல் 12.30 மணியளவில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகில் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு ஆட்டோவில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் ரமேஷை ஆட்டோவில் கடத்தி சென்றனர்.  இந்நிலையில், கடத்தி செல்லப்பட்ட ரமேஷின் அண்ணன் வெங்கடேசனுக்கு மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு, ரமேஷை கடத்தி சென்றுள்ளதாகவும், அவரை விடுவிக்க வேண்டும் என்றால் ₹5 லட்சம் கொண்டு வர வேண்டும் என்று கூறி செல்போனை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தி சென்ற ரமேஷை மீட்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கோயில் பின்புறம் ரமேஷ் அமர்ந்து இருந்தார். அவரை 3 பேர் கொண்ட கும்பல் ஆட்ேடாவில் தூக்கி போட்டுக்கொண்டு கடத்தி சென்றனர். கடத்தியவர் செல்போனில் பேசும்போது, தோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்த ரவுடி சுகுமார் என்கிற சின்னஅப்பு என்பதும், அவரது அண்ணன் சென்னை சிறையில் உள்ளதால், செலவுக்கு ₹5 லட்சம் கேட்டுள்ளார். பணத்தை கொடுக்கவில்லை என்றால் கொலை செய்வதாக மிரட்டி உள்ளார். இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் செல்போன் எண்ணை கொண்டு அவர்களின் இருப்பிடம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் கடத்தப்பட்ட ரமேஷூக்கு செல்போனில் யார், யார் எல்லாம் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் ரமேஷை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : auto masterminds abduction ,
× RELATED ஈரோடு வாலிபரிடம் ₹50 ஆயிரம் பறிமுதல் உரிய ஆவணம் இல்லாததால்