×

சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களுக்கு எதிராக 10,000 பேர் பங்கேற்ற சிறை நிரப்பும் போராட்டம்

திருவாரூர், மார்ச் 19: குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்கள் உள்ளிட்ட 36 இடங்களில் நேற்று சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. அந்த வகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் திருவாரூர் தெற்கு வீதி கிளை சிறை முன்பு சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் முகமது பாசீத் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் அப்துல் காதர், தெற்கு மாவட்ட செயலாளர் அரபாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் கோவை அப்பாஸ் பேசினார்.

சிறை நிரப்பும் போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர் மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். முடிவில் தெற்கு மாவட்ட தலைவர் மிஸ்கின் நன்றி கூறினார். சிறை நிரப்பும் போராட்டத்தையொட்டி திருவாரூர் கிளை சிறை அமைந்துள்ள தெற்கு வீதி பகுதியில் எஸ்பி துரை உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி அன்பழகன் தலைமையில் டிஎஸ்பிக்கள் சிவக்குமார், சங்கர், ரவிக்குமார் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டது.

Tags : prisoners ,CAA ,NRC ,NPR ,
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்