கள்ளக்குறிச்சி, மார்ச் 19: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் கொரோனா நோய் தடுப்பு தொடர்பாக சுயமாக மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு உறுதிமொழிகளை ஒவ்வொருவரும் ஏற்க வேண்டும்.
அதன்படி, நான் பொதுபோக்குவரத்துகளில் பேருந்து, ரயில், விமானம், கப்பல் பயணம் செய்வதை தவிர்ப்பேன். பொது நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள மாட்டேன், திரையரங்குகள் மற்றும் உணவகங்களுக்கு செல்ல மாட்டேன். உடற்பயிற்சிகூடம், நீச்சல் குளத்திற்கு செல்வதையும் தவிர்ப்பேன். நான் வாழ்த்தும்போது உடல் தொடர்பு இல்லாமல் வாழ்த்துவேன்(கை குலுக்குதல் தவிர்த்து கை கூப்பி வணக்கம் தெரிவித்தல்), நான் எனது முகத்தை அடிக்கடி தொடாமல் கவனமாய் இருப்பேன்.
நான் வெளியில் சென்று வீட்டிற்கு வரும்போதும், வீட்டிற்குள் இருக்கும்போதும் தேவைப்படும் பொழுதும் குறிப்பாக சமைப்பதற்கு முன்பும் மற்றும் சாப்பிடுவதற்கு முன்பும் சுகாதாரத்துறை அலுவலர்கள் அறிவுறுத்தியபடி 20 விநாடிகளுக்கு மேல் சோப்பு போட்டு கைகளைக் கழுவுவேன். நான் கை துடைக்கும் துணியினை கொண்டுதான் கதவு, கைப்பிடிகள், படிக்கட்டுகள், வங்கிகளின் பணம் செலுத்தும் இடம் ஆகியவற்றை தொடுவேன்.
நான் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மளிகைக்கடை மற்றும் பால் கடை தவிர்த்து மற்ற இடங்களுக்கு வெளியில் செல்ல மாட்டேன். இத்தகைய நடவடிக்கைகளால் நான் என்னையே தனிமைப்படுத்தியுள்ளேன். நீங்கள் அனைவரும் உங்களை பாதுகாத்துக்கொள்ள எந்த நடவடிக்கை நல்லதோ அதனை மேற்கொள்ளவும். இது ஒன்றும் அதிமிகையான நடவடிக்கை அல்ல, ஒரு கவனமான நடவடிக்கையே ஆகும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.