சாத்தான்குளம், மார்ச் 19: சாத்தான்குளம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட அமுதுண்ணக்குடி- செட்டிக்குளம் இணைப்பு சாலை 8 மாதங்களிலேயே உருக்குலைந்து போனது. இதனால் அவதிப்படும் கிராம மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
சாத்தான்குளம் ஒன்றியம் அமுதுண்ணாக்குடி ஊராட்சி தாம்போதி பாலம் அருகில் இருந்து செட்டிக்குளம், வேலன்புதுக்குளம் செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை வழியாக செட்டிக்குளம், வேலன்புதுக்குளம் செல்லும் மக்கள் இருசக்கரம் மற்றும் இதர வாகனத்திலும், விவசாயிகளுக்கு அப்பகுதியில் உளள தோட்டங்களுக்கு சென்று திரும்புகின்றனர். இந்த சாலை வழியாக நெடுங்குளம், துவர்க்குளம் பகுதியில் இருந்து டாரஸ் லாரிகள் கற்களை ஏற்றி சென்று திரும்புகின்றனர். அந்த லாரிகள் அதிகம் பாரம் ஏற்றி சென்றமையால் பாரம் தாங்காமல் சாலை கடந்த ஆண்டு சேதமடைந்தது. இதனால் கிராமமக்கள் அதனை சீரமைக்க வலியுறுத்தியதையடுத்து அச்சாலை கடந்த 8மாதத்திற்கு முன்பு சீரமைக்கப்பட்டது. அப்போது தாம்போதி பாலம் அமைக்கப்படாமல் விட்டதால் கடந்த 3மாதத்திற்கு முன்பு பெய்த மழைக்கு அப்பகுதியில் சாலை உடைந்து போனது.
இந்நிலையில் தொடர்ந்து டாரஸ் லாரி அதிக பாரத்துடன் கற்கள் ஏற்றி சென்றுவந்ததால் புதியதாக போடப்பட்ட சாலையும் சேதமாகி குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலை அமைத்து குறுகிய காலத்தில் சாலை சேதமானதால் கிராம மக்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் அவதிப்படுவதோடு அதிருப்தியில் உள்ளனர். இதையடுத்து சமூகஆர்வலர்கள் வலை தளங்களில் சாலையை காணவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். எனவே, இதுவிஷயத்தில் இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தி சேதமான சாலையை மீண்டும் அமைப்பதுடன், டாரஸ் லாரி சென்று திரும்பும் வகையில் தரமானதாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.