கும்மிடிப்பூண்டி, மார்ச் 19: கும்மிடிப்பூண்டி அருகே மேற்கூரை இடிந்துவிழும் நிலையில் வட்டார கல்வி அலுவலகம் உள்ளது. இதனால் பொதுமக்கள், அதிகாரிகள் அச்சம் அடைந்துள்ளனர். புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட கோட்டக்கரை பகுதியில் வட்டார கல்வி அலுவலகம் இயங்கி வருகிறது. இக் கட்டிடத்தின் மேற்கூரை ஓடு போடப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆத்துப்பாக்கம், வழுதலம்பேடு, ரெட்டம்பேடு், மாதர்பாக்கம், மங்களம், புதுப்பாளையம், மணலி, அயநெல்லுர், ஆரம்பாக்கம், சுண்ணாம்புகுளம், ஓமசமுத்திரம், புதுவாயல் உள்ளிட்ட 61 ஊராட்சிகளில் உள்ள 100 க்கும் மேற்பட்ட அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலகம் சென்று மாணவர் சேர்க்கை எவ்வளவு, புத்தகம் குறைபாடு, கழிவறை வசதிகள் செய்து தருவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து அதிகாரியிடம் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மேற்கூரைகளில் இருக்கும் பூனை, பாம்பு, எலி உள்ளிட்டவைகள் அலுவலகத்தின் உள்ளே அமர்ந்திருக்கும் அதிகாரிகள் மீதும் பிரச்னைகளை கூறவரும் ஆசிரியர்கள் மீதும் அவ்வப்போது விழுகிறது. இதனால் ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் அச்சமடைந்த அதிகாரிகள், கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என மேல் அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சுவர்கள் விரிசல் அடைந்தும் மேற்கூரை உடைந்தும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ள இக்கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டிடடம் கட்ட வேண்டும் என பொதுமக்களும், ஆசிரியர்களும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.