மஞ்சூர், மார்ச் 19: மஞ்சூர் அருகே அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்களை காட்டு யானை வழிமறித்ததால் பயணிகள் பீதி அடைந்தனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே கெத்தை கிராமம் உள்ளது. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் சுமார் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த யானைகள் கெத்தையை சுற்றிலும் உள்ள வாழை, பாக்கு மற்றும் மலைக்காய்கறி தோட்டங்களில் காட்டுயானைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதுடன், நடு ேராட்டில் நின்று வாகனங்களை வழிமறிப்பது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கோவையில் இருந்து 40 பயணிகளுடன் அரசு பஸ் மஞ்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பெரும்பள்ளம் அருகே சென்ற போது, எதிரே காட்டு யானை ஒன்று நடுரோட்டில் சாலையை மறித்தபடி நின்று கொண்டிருந்தது. இதை பார்த்த டிரைவர் பஸ்சை மெதுவாக இயக்கி சாலையோரமாக நிறுத்தினார். இதேபோல் மஞ்சூரில் இருந்து கோவைக்கு சென்ற வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் யானையை பார்த்த பயணிகள் பீதியுடன் வாகனங்களில் அமர்ந்திருந்தனர். சுமார் ஒருமணி நேரம் சாலையை மறித்தபடி நின்றிருந்த யானை, மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றது. இதைத்தொடர்ந்து அரசு பஸ் மற்றும் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.