×

மதுரை நிதி நிறுவனத்தில் ஏமாந்தவர்களுக்கு பணம் திரும்ப வழங்க நடவடிக்கை

மதுரை, மார்ச் 19: மதுரையில் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: டெல்லியைச் சேர்ந்த அமன்தீப் சிங், ஹர்மன்தீப்சிங், மந்ஜீட்காரூர், ஜஸ்பீர்கவுர், நேனாபாவார் ஆகியோர் மதுரை தமிழ்சங்கம் ரோட்டில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இதில் பொதுமக்கள் பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறியதை நம்பி பலர் பணம் முதலீடு செய்தனர்.ஆனால், அவர்களுக்கு மீண்டும் பணம் கிடைக்கவில்லை. எனவே, பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் தெரிவித்தனர்.

அதன் பேரில் அமன்தீப் சிங் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து பாதிக்ப்பட்டவர்களுக்கு செபியால் நியமிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட இருக்கிறது. எனவே, மதுரை விஸ்வநாதபுரம், மெயின் ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஏற்கனவே, புகார் மனுக்களின் அடிப்படையில் முதலீட்டாளர்களின் வைப்பு பணத்தை திரும்ப பெற்று தர தகுந்த சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, புகார் தெரிவித்தவர்கள் பணம் கட்டிய அசல் ரசீதுகள் மற்றும் ஆவணங்களை உடன் கொண்டு வர வேண்டும்’’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Mathrubhumi Financial Institution ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ