சேந்தமங்கலம், மார்ச் 19: கொல்லிமலை வனப்பகுதியில் உள்ள ஒத்தையடி பாதைகளில் மதுபான பாட்டில், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்பவர்களுக்கு 50 ஆயிரம் அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவார பகுதிகளில் உள்ள காடுகளை பசுமையாக்க வனத்துறை சார்பில், கடந்த மாதம் தேக்கு, சந்தனம், மகிழம், புங்கன், ஆயான், வேம்பு போன்ற பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இதனை வனசரகர் ரவிச்சந்திரன் தலைமையில் வனக்காப்பாளர்கள் பராமரித்து வருகின்றனர். மலையில் உள்ள ஒத்தையடி பாதைகளில் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்கள், மது பானங்கள் பாட்டில்கள் கொண்டு செல்லப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட வன அலுவலர் காஞ்னா உத்தரவின் பேரில், வனத்துறை சார்பில் மலைச்சாலையில் இருந்து குட்டிக்காடு வழியாக நடுக்கோம்பை ஊராட்சி பகுதி முழுவதும் தண்டோரா அடித்து மலைப்பதையின் ஒத்தையடி பாதை வழியாக மதுபான பாட்டில்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு சென்றால் 50 ஆயிரம் அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், வனப்பகுதியில் நடப்பட்டு உள்ள மரக்கன்றுகளை ஆடுகள் மேய்ந்து சேதமாக்கினால், அந்த ஆட்டின் உரிமையாளருக்கு 5 ஆயிரமும், மாடு மேய்ந்து சேதமாக்கினால் 10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.