×

ஏர்வாடி தர்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை

கீழக்கரை, மார்ச் 18: கீழக்கரை அருகே ஏர்வாடியில் குத்பு சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷாகீது ஒலியுல்லா தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் கேரளா,கர்நாடகா, மகாராஷ்டிரா.ஆந்திரா, போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து மகானை தரிசித்து விட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக இங்கு தங்கியிருக்கும் யாத்திரீகர்களை தங்களின் சொந்த ஊருக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். மேலும் மத்திய, மாநில அரசு உத்தரவின் பெயரில் ஊராட்சி மன்ற தலைவர் செய்து அப்பாஸ் தலைமையில் ஊராட்சி மற்றும் சுகாதாரத் துறை இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு முகாமை நடத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏர்வாடி சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனத்திற்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக அனைத்து வாகனங்களையும் ஏர்வாடி நுழைவு வாயில் நிறுத்தி தடுப்பு மருந்து தெளித்த பிறகு தர்காவிற்கு வாகனங்களை அனுமதிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஏர்வாடி ஊராட்சி செயலர் அஜ்மல்கான் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை