×

கொரோனா பாதுகாப்பு பொருட்கள் சரியான விலைக்கு விற்க வேண்டும் மருந்து விற்பனையாளர்கள் கூட்டத்தில் அதிகாரி பேச்சு

மதுரை, மார்ச் 18: ஹேண்ட்வாஷ், சோப்புகள், முகக்கவசம் என கொரோனா பாதுகாப்பு பொருட்களை சரியான விலைக்கு விற்க வேண்டும் என்று மருந்துகள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மதுரை கெமிஸ்ட் அன்ட் டிரக்கிஸ்ட் அசோசியேசன் சார்பில் மருந்து விற்பனையாளர்களுக்கான கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. சங்க தலைவர் கணசேன் தலைமை வகித்தார். மதுரை மண்டல மருந்துகள் கட்டுப்பாட்டுத்துறை உதவி இயக்குநர் ரவிசந்திரன் பேசும்போது, ‘‘கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மருந்துகடைகளில் விற்கப்படும் மருந்துகள், ஹேண்ட்வாஷ், சோப்புகள் மற்றும் முகக் கவசம் உள்ளிட்டவை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு கிடைத்திட வழி செய்ய வேண்டும்.

இப்பொருட்களை சரியான விலைக்கு அதாவது எம்ஆர்பி விலையில்தான் விற்க வேண்டும். போதிய கையிருப்பும் வைத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார். மதுரை மண்டல மருந்து கட்டுப்பாட்டுத்துறை மருந்து ஆய்வாளர் முகமது பிரித்தோஸ், திருமங்கலம் சரக மருந்து ஆய்வாளர் சேவுகராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Tags : speech ,drug dealers ,Corona ,
× RELATED ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையை காக்க...