தூத்துக்குடி, மார்ச் 18: தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 31ம் தேதி வரை பார்களை மூடவேண்டும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் (கோவிட்19) நோய் தடுப்பு முன் நடவடிக்கையாக 17.03.2020 முதல் 31.03.2020 வரை டாஸ்மாக் மதுபானக்கூடங்கள், எப்.எல்.2 மற்றும் எப்.எல்.3 மதுபானக் கூடங்கள் -எப்.எல்.3கிகி மதுபான உரிம தலங்களை மூடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மற்றும் சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை ஆணையாளர் ஆகியோரின் ஆணைகளின்படி உத்தரவு படி கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்நடவடிக்கைகள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையுடன் செயல்பட்டு வரும் மதுபானக்கூடங்கள் (115/145), மனமகிழ்மன்றம் (எப்.எல்.2-1) மற்றும் உணவு விடுதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள் (எப்.எல்.3 -15) ஆகியவற்றை மார்ச் 17 முதல் 31ம் தேதி வரை மூட வேண்டும் என இதன்மூலம் உத்தரவிடப்படுகிறது.
உத்தரவை மீறி செயல்படும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் (டாஸ்மாக் மதுபானக் சில்லறை விற்பனை கடைகள் தவிர) மற்றும் எப்.எல்.2, எப்.எல்.3, உரிமங்கள் மீது உரிய உரிம விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேலும் மேற்குறிப்பிட்ட தினங்களில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியபட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.