காங்கயம், மார்ச் 18: காங்கயம் தாலுகாவில் விவசாயிகளிடமிருந்து 9610 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. காங்கயம் தாலுகாவில், கீழ்பாவனி மற்றும் பி.ஏ.பி பாசனப் பகுதியில் நெல் அறுவடை ஜனவரி மாதம் தொடங்கியது. இதனால், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திட்டுப்பாறை, பரஞ்சேர்வழி, மருதுறை, பழையகோட்டை, முத்தூர், வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் உள்பட தாலுகாவில் 15 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் தொடங்கி நெல் கொள்முதல் செய்து வருகிறது. இதில் ஒரு கிலோ நெல் ரூ.19.05க்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. நேற்று வரை 9610 டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் விற்பனை செய்த நெல்லுக்கான பணம் அவர்களின் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து கொள்முதல் செய்யப்படும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர் சத்திவேல் தெரிவித்துள்ளார்.