திருப்பூர், மார்ச் 18: திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு நூற்றுக்கணக்கான பஸ்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள நவீன கட்டண கழிப்பிடத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பயணிகளிடம் இருந்து புகார் எழுந்தது. மேலும் அதிக கட்டணம் வசூலிப்பதற்கு வசதியாக சம்பந்தப்பட்ட கழிப்பிடத்தின் முன்பகுதியில் எழுதப்பட்டிருந்த கட்டண விவரங்கள் அழிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து மாநகராட்சி 2வது மண்டல உதவி கமிஷனர் செல்வநாயகம் சம்பந்தப்பட்ட சுகாதார வளாகத்திற்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் அதிக கட்டணம் வசூலித்ததாக கூறி சுகாதார வளாக ஒப்பந்ததாரருக்கு ரூ.500 அபராதம் விதித்தார். மேலும் அங்கு சரியான கட்டண விபரங்களை தெளிவாக எழுதுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டதை தொடர்ந்து உடனடியாக அங்கு சரியான கட்டண விவரம் எழுதப்பட்டது.