காங்கயம், மார்ச் 18: காங்கயம் நகரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பாலம் பயன்பாட்டுக்கு வரும் வகையில் இணைப்புச் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். காங்கயம் கோவை மெயின் சாலையில் இருந்து எஸ்.ஜி.எஸ் காலனி வழியாக பஸ் நிலையம் வரும் சாலையில் சாக்கடை கால்வாய் கடக்கும் இடத்தில் இருந்த பாலம் பழுதடைந்தது. இதனால் கழிவு நீர் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் நகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்ட பாலம், 15 நாட்களில் இடிந்தது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் காங்கயம் நகரில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வந்தது. இடிந்த பாலம் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலத்தை இணைக்கும் பகுதியில் தார்சாலையை சரிசெய்யாமல் உள்ளதால், போக்குவரத்துக்கு வழி இல்லாமல் உள்ளது. இதனால் பாலம் வேலைகள் நிறைவடைந்தும் மக்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளனர். எனவே, நகராட்சி நிர்வாகம் இணைப்பு சாலையை சரி செய்து போக்குவரத்துக்கு வழி செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.