இளம்பிள்ளை, மார்ச் 16: இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், நேற்று இலவச ஹோமியோபதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பிரேமலதா சதீஷ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். ரோட்டரி கிளப் ஆப் சேலம் மிட் டவுன் ஹேமலதா வரவேற்று பேசினார். தொடர்ந்து விநாயக மிஷின் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி முதல்வர் நாகராஜ் சிறப்புரையற்றினார். மருத்துவர் வெற்றிவேந்தன், நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி முதல்வர் சீனிவாசன், ஒன்றியக்குழு உறுப்பினர் சாஸ்தா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வடிவேல், துறைத்தலைவர் சபரிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முகாமில் ஆஸ்துமா, அலர்ஜி, சிறுநீரக கற்கள், மலச்சிக்கல், குடல்புண், தலைவலி, மூட்டுவலி, ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, முடி உதிர்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு ஆலோசனையும், மருந்துகளும் வழங்கப்பட்டன. இதில் 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாட்டினை விநாயகா மிஷன்ஸ் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சேலம் மிட் டவுன், ரோட்டராக்ட் கிளப், உன்னத் பாரத் அபியான் இணைந்து நடத்தின.