நாமக்கல், மார்ச் 18: எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தேர்வு வினாத்தாள் நாமக்கல் கொண்டு வரப்பட்டு 10 மையங்களில் போலீஸ்பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 27ம் தேதி 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு துவங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தேர்வினை 19 ஆயிரம் மாணவ, மாணவியர் எழுதுகிறார்கள். இதற்காக மாவட்டம் முழுவதும் 92 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது தேர்வுக்கான வினாத்தாள் நேற்று நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு வந்தது. இவற்றை போலீஸ் பாதுகாப்புடன் மாவட்டத்தில் உள்ள 10 கட்டுக்காப்பு மையங்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் உதயகுமார், ரவி, துணை ஆய்வாளர்கள் பெரியசாமி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அனுப்பி வைத்தனர்.
ஒவ்வொரு கட்டுக்காப்பு மையத்துக்கும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவ, மாணவியர் தேர்வு எழுத வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராசிபுரம் தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி என இரண்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.