ஈரோடு, மார்ச் 18: வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்குள் வரும் நபர்கள் குறித்து உடனடியாக போலீசார் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை இந்தியாவில் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பினை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. ஈரோட்டில் உள்ள ஜவுளி சந்தை, மாட்டு சந்தை ஆகியவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக கர்நாடக எல்லைப்பகுதிகளான தாளவாடி, சத்தியமங்கலம், பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து சுகாதாரத்துறை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதே போல வெளிமாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்குள் வரும் நபர்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்குள் வரும் நபர்கள் குறித்து போலீசார் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல்துறைக்கு கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார். இதில் குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வரும் நபர்களை முழு பரிசோதனைக்கு உட்படுத்தி கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என்பதை உறுதிபடுத்திய பிறகே வெளியில் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.