×

காதல் ஜோடியிடம் பணம் பறித்த 2 போலீசார் டிஸ்மிஸ்

புதுச்சேரி, மார்ச் 17: புதுவை பெரியகடை காவல்நிலையத்தில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்ட கவர்னர் கிரண்பேடி, விடுதியில் நடந்த பாலியல் வன்புணர்வு விவகாரம் தொடர்பாக அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். மேலும் இப்பிரச்னையில் தப்பியோடிய காவலர்களை உடனடியாக பிடிக்கும்படி அதிரடி உத்தரவிட்டார்.புதுச்சேரி அம்பலத்தடையார் மடத்து வீதியிலுள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த இரண்டு ஜோடிகளை பெரியகடை காவல் நிலையத்தைச் சேர்ந்த 2 போலீசார் மிரட்டி பணம் பறித்ததோடு, அதில் ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸ் உயரதிகாரிகள் சதீஷ், சுரேஷ்குமார் ஆகிய இரண்டு போலீசாரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கவர்னர் கிரண்பேடி தனது முகத்தில் மாஸ்க் அணிந்தபடி பெரியகடை காவல் நிலையத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது சீனியர் எஸ்பி ராகுல்அல்வால், எஸ்பி மாறன், இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துகுமரன், முருகன் உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.

அவர்களிடம் பேசிய ஆளுநர் கிரண்பேடி, கடந்த சில நாட்களாக பெரியகடை காவல்நிலையம் தொடர்பான பல்வேறு புகார்கள் எனது தனிப்பட்ட இ-மெயிலுக்கும், கடிதம் மூலமாகவும் வந்ததால் இங்கு வந்துள்ளேன். விடுதியில் உண்மையில் என்ன நடந்தது? என்று தெரிந்து கொள்ளவே ஆய்வுக்கு வந்துள்ளேன். விடுதியில் ஆய்வுக்கு சென்றவர்கள் யார்? உயரதிகாரியின் உத்தரவின் பேரில் அங்கு சென்றனரா? ரெய்டின் போது பெண் காவலர்களை ஏன் உடன் அழைத்து செல்லவில்லை? இந்த ஆய்வின் நோக்கமே உங்களின் பணியை மேம்படுத்தி கொள்வதற்காகத்தான்.
காவல் நிலையத்துக்கு வந்த புகார்கள், கடிதம் மூலம் வரும் புகார்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

போலீசார் களத்துக்கு செல்கிறார்களா? பீட் ஆபீசர்களின் பணிதான் என்ன? பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க வேண்டியதே காவல்துறையின் முதல் கடமை. விடுதியில் நடந்த தவறு குறித்து காவல்நிலைய அதிகாரி எடுத்த நடவடிக்கை என்ன? தவறு செய்திருந்தால் அதிகாரிகளாக இருந்தாலும் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். புகார்களின் மீது காவல்துறை சட்டப்படி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.பின்னர் அங்கிருந்த போலீசாரை அழைத்து தனியாக அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து ஐஆர்பிஎன் படை பிரிவுக்கு சென்று, ஆய்வு மேற்கொண்டார்.

Tags : love couple ,
× RELATED பைக்கின் முன்பு காதலியை அமர வைத்து...