×

அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

பாகூர், மார்ச் 17:பாகூர் கடைத்தெரு பகுதியில் சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகி வருவதாகவும், எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக தாசில்தார் குமரன் தலைமையில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சவுந்திரராஜன், எஸ்பி ஜிந்தா கோதண்டராமன், இன்ஸ்பெக்டர் அனில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்றனர். அப்போது முன்னறிவிப்பு இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகள் தரப்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்பாக பலமுறை தெரிவித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை எழுத்துப்பூர்வமாக எதையும் தரவில்லை என்று தெரிவித்த வியாபாரிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு காலஅவகாசம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து, 2 நாள் அவகாசம் அளித்த அதிகாரிகள், அதற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்து விட்டு சென்றனர்.இந்த சம்பவத்தால் பாகூர் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Tags : Merchants ,
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...