×

வேளாண் அதிகாரி தகவல் கொரநாட்டுகருப்பூர் சுந்தரேஸ்வரர் கோயில் சேதமடைந்த ராஜகோபுர இடிதாங்கியால் ஆபத்து

கும்பகோணம், மார்ச் 17: கொரநாட்டுகருப்பூர் சுந்தரேஸ்வரர் கோயில் ராஜகோபுரத்தில் சேதமடைந்து தொங்கி கொண்டிக்கும் இடிதாங்கியால் பக்தர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். கும்பகோணம் அடுத்த கொரநாட்டுகருப்பூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுந்தரரேஸ்வரர் கோயில் உள்ளது. அந்த கோயில் வளாகத்தில் பெட்டி காளியம்மன் எனப்படும் சுந்தர மகாகாளியம்மன், மூலவர் சன்னதிக்கு அருகில் அம்மன் சன்னிதியின் கிழக்கில் சுந்தர மகாகாளியின் பெட்டி உள்ளது. இந்த பெட்டியில் சுந்தர மகாகாளியின் இடுப்புக்கு மேற்பட்ட திருமேனி வைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டி எப்போதும் மூடிய நிலையில் இருக்கும். இந்த பெட்டியையே மூலவராக பாவித்து மாலையிட்டு அர்ச்சனை செய்து வழிபட்டு வருகின்றனர். சித்திரை மாதம் பெட்டிக்காளி வீதியுலா உற்சவம் நடக்கிறது.

ஒரு சில 100 ஆண்டுகளுக்கு முன் காவிரியில் வெள்ளம் வந்தபோது ஒரு பெட்டி கரையில் ஒதுங்கியது. அதில் மரத்தால் செய்யப்பட்ட ஒரு காளியின் பாதி சிலை பகுதி இருந்தது. அச்சிலையை என்ன செய்வது என ஊர் மக்கள் சிந்தித்தனர். பின்னர் அப்பகுதி மக்கள், காளியை ஒரு பெட்டியில் வைத்து பூட்டி ஒரு ஓலை குடிசையில் வைத்து பூஜை செய்தனர். அந்த குடிசை ஒருநாள் திடீரென தீப்பிடித்தபோது மக்கள் அந்த பெட்டியை காப்பாற்றி சுந்தரேஸ்வரர் கோயிலில் வளாகத்தில் வைத்து வழிபாடு நடத்த துவங்கினர். இடுப்புக்கு மேல் உருவத்துடன் 8 கரங்கள் கொண்ட இக்காளியின் வலது நான்கு கரங்களில் சூலம், அரிவாள், உடுக்கை மற்றும் கிளியும், இடது நான்கு கரங்களில் பாசம், கேடயம், மணி மற்றும் கபாலமும் ஏந்தியும் காணப்படுகின்றன. இந்த காளிக்கு சாத்தப்படும் பூ, குங்குமம் போன்றவை பிரசாதங்களாக வழங்கப்படுவதில்லை.

இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது ராஜகோபுரத்தில் இடி, மின்னல் தாக்கக்கூடாது என்பதற்காக பல லட்ச ரூபாய் செலவில் இரும்பு மற்றும் பித்தளை, செம்பினாலான 10 அடி உயரத்தில் இடிதாங்கி வைத்தனர். ஆனால் போதுமான பராமரிப்பு இல்லாததால் காற்று மற்றும் மழையால் இடிதாங்கியின் கீழ்பகுதியில் தண்ணீர் தேங்கி துருபிடித்து கீழே சாய்ந்தது. தற்போது கோயிலின் கோபுரத்தின் மேல் ஆபத்தான நிலையில் இடிதாங்கி தொங்கி கொண்டிருப்பதால் பக்தர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இந்த இடிதாங்கி கீழே விழுநதால் அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே கொரநாட்டுக்கருப்பூர் சுந்தரேஸ்வரர் கோயில் ராஜகோபுரத்தில் ஆபத்தான வகையில் தொங்கி கொண்டிருக்கும் இடிதாங்கியை சீரமைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Koranatukarupur Sundareswarar Temple ,
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில்...