×

பொகளூர் ஊராட்சியில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கிராம மக்கள் சாலைமறியல்

அன்னூர், மார்ச் 17: அன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட, பொகளூர் ஊராட்சியில் உள்ள, ஏ.டி காலனி பகுதியில் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றன. பட்டத்தரசி அம்மன் கோவில் அருகில், காலனி ஒட்டி இடம் இருக்கிறது. இதை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், வண்டிப் பாதையில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளதாகவும், தங்களின் குழந்தைகள் விளையாடுவதற்கும், கோவில் திருவிழாவின்போது இடப்பற்றாக்குறை ஏற்படுவதாகவும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நேற்று பொகளூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை ஏ.டி. காலனி பொதுமக்கள் முற்றுகையிட்டு, அன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த சிறுமுகை போலீசார் ராம்பிரபு, காசிபாண்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என பொதுமக்களிடம், கூறியதை அடுத்து  மறியலை கைவிட்டு, அதிகாரிகளுக்காக பொதுமக்கள் காத்திருந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அன்னூர் தாசில்தார் இந்திரா, ஒரு மாதத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : removal ,Bogalur ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...