×

சீரான குடிநீர் விநியோகம் செய்யாவிட்டால் நகராட்சி அலுவலகம் முற்றுகை

சத்தியமங்கலம், மார்ச் 17: சீரான குடிநீர் விநியோகம் செய்யாவிட்டால் நகராட்சி அலுவலகம் முற்றுகையிட போவதாக மக்கள் அறிவித்துள்ளனர். சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட வரதம்பாளையம், பெரிய வெங்கடாசலம் பிள்ளை வீதி, பத்ரகாளியம்மன் கோயில் மேற்கு வீதி உள்ளிட்ட 13, 14 மற்றும் 16 வது வார்டு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதிக்கு கோட்டுவீராம்பாளையம் பகுதியில் உள்ள மேல்நிலைத்தொட்டி முலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தினமும் காலையில் ஒரு மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் சூழ்நிலையில் கடந்த சில மாதங்களாக வீட்டுக்குடிநீர் குழாய்களில் மிகவும் குறைந்த அழுத்தத்தில் தண்ணீர் மெதுவாக வருவதால் ஒரு வீட்டுக்கு தினமும் 6 முதல் 8 குடம் தண்ணீர் மட்டுமே கிடைப்பதாக இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால், குடிநீர் பற்றாக்குறையால் தவித்து வரும் மக்கள், இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக சீரான குடிநீர் விநியோகம் செய்யாவிட்டால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை