×

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.3.23 லட்சம் நலத்திட்ட உதவி

ஈரோடு, மார்ச் 17: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். இக் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில்கடன், குடிநீர், சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 181 மனுக்கள் வரப்பெற்றது.பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் கதிரவன்,  துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், மாவட்ட உயர் அலுவலர்களின் மனுநீதிநாள் முகாம் மனுக்கள், மக்களை தேடி வருவாய்த்துறை அம்மா திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆகியவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் 29 பேருக்கு 3 லட்சத்து 23 ஆயிரத்து 630 ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கதிரவன் வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் தினேஷ், ஈஸ்வரன், மாவட்ட வழங்கல் அலுவலர் கற்பகவள்ளி, மாவட்ட சமூக நல அலுவலர் பூங்கோதை மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை