×

பரமத்திவேலூர் அருகே விபத்தில் இன்ஜி., மாணவர் பலி அரசு பஸ் டிரைவர் கைது

பரமத்தி வேலூர, மார்ச் 17: பரமத்திவேலூர் அருகே அரசு பஸ் மோதி பொறியியல் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் தளிகையை அடுத்துள்ள சுப்பாநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த  கோவிந்தராஜ் மகன் சஞ்சய்(23). இவர் பரமத்தி அருகே உள்ள  தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். நேற்று மாலை, உடன் படித்து வரும் ஜங்கமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த துரைசாமி மகன் பார்த்திபன்(23) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். பைபாஸ் சாலை சந்திப்பில் சென்றபோது, கரூரில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது.

இதில், பின்னால் அமர்ந்திருந்த சஞ்சய் தூக்கி வீசப்பட்டு தலை மற்றும் இடுப்பு பகுதியில் படுகாயமடைந்தார். பார்த்திபன்  அதிர்ஷ்டவசமாக  காயங்கள் ஏதும் இன்றி உயிர் தப்பினார். அருகில் இருந்தவர்கள் சஞ்சயை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின்பேரில், பரமத்தி போலீசார் விரைந்து சென்று சஞ்சயின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அரசு பஸ் டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Bus driver ,accident ,Paramathivelur ,
× RELATED போதையில் நண்பர்களுடன் எஸ்ஐயை தாக்கிய விஏஓ