நாமகிரிபேட்டை, மார்ச் 17: தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, முள்ளுக்குறிச்சியில் மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாமகிரிபேட்டை அருகே முள்ளுக்குறிச்சியில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தையும், குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு பணிகளை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பஸ் நிலையம் அருகே நடந்த போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வெள்ளைசாமி துவக்கி வைத்தார்.
முத்தவல்லி பஷீர் அகமது, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட தலைவர் பாஸ்டர் வின்சென்ட் தேவதாஸ், மாவட்ட துணை செயலாளர் ரவிநாத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமி கலந்து கொண்டு பேசினார். மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் சின்னசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை நிர்வாகி ராஜாமுகமது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா தலைவர் ஆறு முத்துசாமி, கரியாம்பட்டி கந்தசாமி, கொல்லிமலை தாலுகா செயலாளர் தங்கராஜ், மாணிக்கம், ராஜூ, மாவட்ட பொருளாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். ஒன்றிய செயலாளர் துரைசாமி நன்றி கூறினார்.