×

ராயபுரத்தில் பழுதான சமுதாய நலக்கூடத்தில் ரேஷன் கடை அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

தண்டையார்பேட்டை: ராயபுரத்தில் உள்ள சேதமடைந்த சமுதாய நலக்கூடத்தில் ரேஷன் கடை அமையவுள்ளதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சி 5வது மண்டலம் 52வது வார்டுக்குட்பட்ட ராயபுரம் தொப்பை தெருவில் மாநகராட்சி சமுக நலக்கூடம் உள்ளது. இந்த சமுதாய கூடம் பழுதடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் உள்ளது. இதனால் இந்த இடத்தில் உணவு பொருள் வழங்கல் அலுவலகம் தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக இருந்தது. இதனையறிந்த அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் ஒன்று திரண்டு நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீரென சிமெண்ட்ரி  சாலை தொப்பை தெரு சந்திப்பில் சாலை மறியலில்  ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து ராயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட  30க்கும் மேற்பட்டவர்களை கைது  செய்து அதே பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுவித்தனர். பொதுமக்கள் தங்களுக்கு மீண்டும் சமுதாய நலக்கூடத்தை புதுப்பித்து பயன்பாட்டிற்கு வழங்க  வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : community center ,picketing ,road ,Ramanapuram ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...