×

மணலி போஸ்ட் ஆபீசில் அலுவலர் விடுமுறை பதிவு தபால் அனுப்ப பொதுமக்கள் அலைக்கழிப்பு: வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருவொற்றியூர்: மணலி தபால் நிலையத்தில் அலுவலர் விடுமுறை என்பதால் பதிவுத்தபால் அனுப்பாமல் பொதுமக்களை திருப்பி அனுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மணலி  ஜலகண்ட மாரியம்மன் கோவில் தெருவில் மத்திய அரசின் தபால் நிலையம் உள்ளது. இங்கு கடிதப் பரிமாற்றம்,  மணி ஆர்டர், வரைவு காசோலை, வைப்பு நிதி போன்ற பல்வேறு பணிகளுக்காக தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், இங்கு போதுமான அலுவலர்கள் இல்லை. இதனால் தபால் மற்றும் மணி ஆர்டர் செய்வதற்காக வரக்கூடிய பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். நேற்று காலை பதிவு தபால் செய்வதற்காக ஏராளமான பொதுமக்கள் நீண்ட நேரமாக காத்திருந்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட அலுவலர் வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கிருந்த சக அலுவலரிடம், “பதிவு தபால் அலுவலர் ஏன் வரவில்லை” என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு அங்கிருந்த அலுவலர்கள், “சம்பந்தப்பட்ட அலுவலர் இன்று விடுமுறை. அதனால் இங்கு பதிவு செய்ய முடியாது. வேறு ஒரு கிளைக்கு நீங்கள் செல்லுங்கள்” என்று திருப்பி அனுப்பிவிட்டார். இதனால் பொதுமக்கள் நேற்று முழுவதும் வேறு கிளைக்கு சென்று சிரமத்துடன் பதிவுத்தபால் அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.


Tags : vacation ,Manali Post Office ,
× RELATED ஆயுதபூஜை விடுமுறைக்கால ரயில் முன்பதிவுகள் துவக்கம்