நீடாமங்கலம், மார்ச் 17:நீடாமங்கலம் ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, துப்புரவு பணியாளர்களுக்கு ஊதிய பாக்கியை விரைவில் வழங்க சிஐடியூ வலியுறுத்தி உள்ளது. நீடாமங்கலம் ஒன்றிய ஊரகவளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க (சிஐடியூ) ஒன்றிய கூட்டம் அதன் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது. மாநிலத் தலைவர் பாலசுப்ரமணியன், மாவட்டச் செயலாளர் முனியாண்டி மற்றும் நீடாமங்கலம் நிர்வாகிகள் மகேந்திரன், தனாபல், கருணாநிதி, பெரியசாமி, செல்வம், சண்முகபிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.நீடாமங்கலம் ஒன்றியத்தில் ராயபுரம், சோனாப்பேட்டை, கட்டக்குடி, நல்லிக்கோட்டை, எடமேலையூர் நடுத்தெரு உள்ளிட்ட ஊராட்சிகளில் ஊராட்சி மேல்நிலைத்தொட்டி இயக்குனர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு பல மாத ஊதிய பாக்கி உள்ளது. ஊராட்சிகளில் தூய்மை காவலர்கள் ஊதியபாக்கியும் உள்ளது. பொங்கல் போனஸ் இதுவரை தரப்படவில்லை. இதனால் நீடாமங்கலம் ஒன்றியத்தில் குடிநீர், சுகாதாரப்பணிகள் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு ஊழியர்களுக்கான ஊதிய பாக்கியை உடனே வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.