சென்னை: திருவல்லிக்கேணி பகுதியில் செல்போன் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, கொள்ளைபோன 216 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் தர்மராஜன் தலைமையில் நடந்தது. நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி, திருவல்லிக்கேணி உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.அப்போது, சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து, செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் துணை ஆணையர் தர்மராஜன் பேசுகையில், ‘‘திருவல்லிக்கேணி சுற்றுவட்டார பகுதியில் செல்போன் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வந்ததால் இது சம்பந்தமான வழக்குகளில் கவனம் செலுத்துமாறு திருவல்லிக்கேணி உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் தனிப்படை உருவாக்கப்பட்டு 216 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் தொடர் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 25 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்,’’ என்றார்.