×

ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரே இடத்தில் அதிமுக அமமுக நிகழ்ச்சி: அசம்பாவிதம் தவிர்க்க போலீஸ் குவிப்பு

தண்டையார்பேட்டை:  சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் டிடிவி.தினகரன். இவர் தொகுதி மக்களுக்கு இதுவரை எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. சில மாதத்துக்கு முன் தொகுதிக்கு வந்த டிடிவி தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வடசென்னை மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், தனது ஆதரவாளர்களுடன் வந்து 20 ரூபாய் நோட்டுகளை காண்பித்து போராட்டம் நடத்தினார். இதன்காரணமாக இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்தநிலையில் ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் அமமுகவின் 3ம் ஆண்டுவிழாவை முன்னிட்டு தண்டையார்பேட்டை ரெட்டக்குழி தெருவில் உள்ள டிடிவி தினகரன் தொகுதி அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை  முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல் ஏற்பாடு செய்திருந்தார்.  இதில் கலந்துகொள்வதற்கு டிடிவி தினகரன் வருவதாக இருந்தது.

டிடிவி தொகுதி அலுவலகம் அருகே சேணியம்மன் கோயில் தெருவில் அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் ஏற்பாட்டில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மூலம் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதன்காரணமாக இப்பகுதியில் அதிமுக, அமமுக தொண்டர்கள் திரண்டுள்ளதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக தண்டையார்பேட்டை வைத்தியநாதன் தெரு, இளையாமுதலிதெரு, சேணியம்மன் கோயில்தெரு, ரெட்டக்குழிதெரு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  இந்நிலையில் டிடிவி தினகரன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரவில்லை.

Tags : constituency ,AIADMK ,RK Nagar ,Police mobilization ,
× RELATED நேற்று அதிமுக கூட்டணி இறுதி; இன்று...