×

சின்னசேலம் பகுதியில் கடும் வறட்சி மரவள்ளி, சோளப்பயிர் கருகும் அபாயம்

சின்னசேலம், மார்ச் 13:  சின்னசேலம் பகுதியில் கடும் வறட்சியின் காரணமாக விவசாயிகள் பயிரிட்டுள்ள மரவள்ளி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.
சின்னசேலம் தாலுகாவுக்கு உட்பட்டு சுமார் 50 கிராமங்களும், மிக பரந்து விரிந்த கல்வராயன்மலையும் உள்ளது. சின்னசேலம் தாலுகா பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் மரவள்ளி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். சின்னசேலம் பகுதியில் ஆரம்ப கட்டத்தில் தங்கள் கிணற்றில் உள்ள நீரை பயன்படுத்தி விவசாயம் செய்தனர். பல விவசாயிகள் மானாவாரி சாகுபடி மூலம் மரவள்ளி, மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தனர். விவசாயிகள் பயிர் செய்த பிறகு பெய்ய வேண்டிய பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை. மாறாக கடும் வறட்சி ஏற்பட்டு வருகிறது. விவசாய கிணறுகளிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பயிரிட்டுள்ள மக்காச்சோளம் போன்ற பணப்பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது. மேலும் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினால் பொதுமக்கள் குடிநீருக்கே காடு காடாக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

சின்னசேலம் பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களில் உள்ள ஏரிகளில் சொட்டு நீர் கூட இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. அதேபோல கல்வராயன்மலையில் முக்கிய சாகுபடியே மரவள்ளி பயிர் ஆகும். கடந்த காலங்களில் மலையில் பருவமழை ஓரளவு பெய்தது. அதனால் மரவள்ளி காய்ந்து போகாமல் அறுவடைக்கு தயாராகும். ஆனால் இந்த ஆண்டு கல்வராயன்மலையில் ஓரளவு மழை பெய்த போதும் தற்போது உள்ள வெயிலின் தாக்கத்தால் பெரும்பாலான விவசாயிகள் நட்ட மரவள்ளி காய்ந்து சருகாகி வருகிறது. இதனால் மலைமக்களும் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்த ஆண்டு போதிய அளவில் பருவமழை பெய்யாததால் சின்னசேலம், கல்வராயன்மலை பகுதியில் உள்ள விவசாயிகள் வட்டிக்கு பணம் வாங்கி பயிர் செய்த கடனை அடைக்க முடியாத சோகத்தில் உள்ளனர். ஆகையால் வேளாண்மைத்துறையினர் பயிர் காப்பீட்டு திட்டம் பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளிடையே ஏற்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : area ,Chinasalem ,
× RELATED வாட்டி வதைக்கும்...