திருச்சி, மார்ச் 13: அரசு அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வரும் 17ம் தேதி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் அரசு அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வரும் 17ம் தேதி அண்ணா விளையாட்டரங்கில் காலை 8.30 மணி முதல் நடைபெற உள்ளது. தடகளம் ஆண்கள்: 100மீ, 200மீ, 800மீ, 1500மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 4X100மீ ரிலே பெண்கள்: 100மீ, 200மீ, 400மீ, 800மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 4X100மீ ரிலே. இருபாலருக்கும்: இறகுப்பந்து, கூடைப்பந்து, கையுந்துபந்து, கபடி, மேஜைப்பந்து, டென்னிஸ், கால்பந்து (ஆண்களுக்கு மட்டும்). போட்டிகள் காலை 8.30க்கு துவக்கப்படும். தாமதமாக வந்தால் அனுமதிக்க இயலாது. மாநில அரசின் கீழ் நிரந்தர பணியில் பணிபுரிவோர், பணியில் சேர்ந்து 6 மாதங்களுக்கு மேல் பணிபுரிந்த அனைவரும் இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.
தினக்கூலி அடிப்படையில் பணிவோர் கலந்து கொள்ள இயலாது. அரசு கல்வித்துறை நிறுவனங்கள், உடற் கல்வித்துறையில் பணிபுரிவோர் கலந்து கொள்ளலாம்• காவல்துறை, வாரியங்கள் (போர்டு) மற்றும் மத்திய அரசு பணியில் பணிபுரிவோர் அனுமதிக்கப்பட மாட்டார். சீருடை பணியாளர்கள் கலந்து கொள்ள இயலாது. காவல்துறை அலுவலகத்தில் பணிபுரிவோர் கலந்து கொள்ளலாம். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதி உண்டு. குழு போட்டிகளில், ஒரு துறையிலிருந்து ஒரு அணி மட்டுமே கலந்துகொள்ள இயலும். தனிநபர் போட்டிகளில் ஒரு நபர் ஒரு தடகளப் பிரிவு போட்டியில் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படும். அரசுதுறை அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் தாங்கள் கலந்துகொள்ள விரும்பும் விளையாட்டினை தேர்வு செய்து பெயர் மற்றும் ஜிபிஎப் எண்ணுடன் துறைத்தலைவர் கையொப்பமிட்ட நுழைவு படிவத்தினை மார்ச் 17 அன்று காலை 8.30 மணிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி 620023 (போன் 0431-2420685) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.