×

செக்போஸ்ட் பகுதியில் விபத்து ஏற்படுவதை தடுக்க ரவுண்டானா அமைக்கப்படுமா?

தொண்டி, மார்ச் 13:  தொண்டியில் மும்முனை சந்திப்பான பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள செக்போஸ்டில் விபத்தினை தவிர்க்கும் விதமாக  ரவுண்டானா அமைக்க வேண்டும் என நீண்ட நாள்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை, பட்டுக்கோட்டை ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரையும் தொண்டி செக்போஸ்டில் சந்திக்கும் சாலையாக உள்ளது. மும்முனை சந்திப்பில் இங்கு எதிரே வரும் வாகனம் தெரியாத அளவிற்கு வளைவாக உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனம் தெரியாமல் அடிக்கடி விபத்து நடக்கிறது. மேலும் இரவு நேரத்தில் கால்நடைகளும் வளைவுகளில் படுத்துக் கொள்வதால் விபத்து நடக்கிறது. மிகவும் பரபரப்பான இச்சாலையின் முக்கிய பகுதியான இங்கு ரவுண்டானா அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சாதிக் பாட்சா கூறியது, ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி வளர்ந்து வரும் முக்கிய நகரமாகும். தொண்டியிலிருந்து அனைத்து பெருநகரங்களுக்கும் வாகனங்கள் இயக்கப்படுகிறது. மேலும் கனரக வாகனங்கள் முதல் அனைத்து வகை வாகனங்களும் இச்சாலையில் அதிகளவில் செல்கிறது, நகரின் முக்கிய பகுதியான செக்போஸ்டில் இருந்துதான் மதுரை, பட்டுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளுக்கு ரோடு பிரிந்து செல்கிறது. மும்முனை சந்திப்பான இங்கு விபத்தினை தவிர்க்கும் பொருட்டு ரவுண்டான அமைக்க வேண்டும் என்றார்.

Tags : accidents ,area ,CheckPost ,
× RELATED எளாவூர் ஒருங்கிணைந்த...