கரூர், மார்ச் 13: கரூர் மாவட்ட பேனா நண்பர் பேரவை மற்றும் திருக்குறள் பேரவை ஆகியவற்றின் சார்பில் நண்பர்கள் தினவிழா நடைபெற்றது. கரூர் அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பேரவை மாவட்ட அமைப்பாளர் திருமூர்த்தி வரவேற்றார். திருக்குறள் பேரவை நிர்வாகி மேலை பழனியப்பன் கலந்து கொண்டு, நாட்டை உலுக்கும் கொரோனா வைரஸால் நாம் அச்சப்படத் தேவையில்லை. தூய்மை போற்றுதல், ஒவ்வொரு முறையும் கை கழுவுதல், ஆடைகளை துவைத்து பயன்படுத்துதல், உடல் நலத்தை பாதுகாத்தல் போன்றவற்றை கடைபிடித்தால் நோயை தவிர்க்கலாம் என்றார். தொடர்ந்து பள்ளிக்கு எடை பார்க்கும் இயந்திரம் வழங்கப்பட்டதோடு, திருக்குறள், பேனா போன்றவையும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில், தலைமையாசிரியை சரஸ்வதி உட்பட அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.