ஆத்தூர், மார்ச் 13: ஆத்தூர் நகராட்சி 7வது வார்டில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்டவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆத்தூர் நகராட்சி 7வது வார்டுக்குட்பட்ட அம்மன் நகர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் கடந்த 1996ம் ஆண்டு மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டப்பட்டது. தற்போது இந்த தொட்டி பழுதடைந்து சிமெண்ட் காரைகள் பெயர்ந்தும், பல இடங்களில் விரிசல் விழுந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.
இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள், நகராட்சி ஆணையாளர் மற்றும் கலெக்டருக்கு மனுக்களை அனுப்பி உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, தற்போது மிகவும் சிதிலமடைந்து உள்ளது. இந்த தொட்டியின் அருகில் குழந்தைகள் விளையாடுகின்றனர். எனவே, அசம்பாவிதம் நிகழும் முன்பாக, இந்த தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.