×

குண்டல்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணி தாமதம்

தர்மபுரி, மார்ச் 13: தர்மபுரி அடுத்த குண்டல்பட்டி அருகே மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வாகனங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து, 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மேம்பாலம் அமைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தர்மபுரி மாவட்டம் குண்டல்பட்டி அருகே தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது அடிக்கடி விபத்துக்கள் நடந்து உயிரிழப்பும் ஏற்பட்டது. இதையடுத்து குண்டல்பட்டி ெபங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வாகனங்கள் சாலையை கடக்க முடியாதபடி சாலை மூடப்பட்டது. இதையடுத்து தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் வாகனங்கள், பழைய தர்மபுரி, சவுளுப்பட்டி வழியாக பெங்களுரு நோக்கி சென்றன. இதனால் முத்துப்பட்டி, கொளகத்தூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குண்டல்பட்டி அடுத்த கால்நடை ஆராய்ச்சி மையம் அருகே சென்று, தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர். இதனால் குண்டல்பட்டி சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், கடந்த 2018ம் ஆண்டு குண்டல்பட்டி சந்திப்பில் மேம்பாலம் அமைப்பதற்காக ஆய்வு செய்தனர். பின்னர் குண்டல்பட்டி கால்நடை ஆராய்ச்சி மையம், மல்லிக்குட்டை சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலைதுறை ஆணையம் சார்பில், ஊழியர்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் டூவீலர்கள், கார்கள், லாரிகள், பஸ்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனர். வாகனங்களின் எண்ணிக்கை, பாதசாரிகள் ஆகியன குறித்த கணக்கெடுப்பு, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் குண்டல்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில், மேம்பாலம் கட்டப்படுவதற்கான எந்த அறிவிப்பும் வரவில்லை. எனவே மல்லிக்குட்டை, பழையதர்மபுரி, முத்துப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமமக்களின் நலன் கருதி, குண்டல்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உடனடியாக மேம்பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : highway ,Kundalpatti ,
× RELATED கலவை- வாழைப்பந்தல் நெடுஞ்சாலையில் மரங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரிப்பு