×

சூலூர்பேட்டை-சென்னை ரயிலில் அரிவாளுடன் பயணம் செய்த மாணவர் கைது

கும்மிடிப்பூண்டி, மார்ச் 13: கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கமாக சூலூர்பேட்டை, பொன்னேரி, அத்திப்பட்டு, சென்னை, அம்பத்தூர், அரக்கோணம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின்சார ரயில்களில்  கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த வியாபாரிகள் கல்லூரி மாணவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்கள் தினந்தோறும் பயணித்து வருகின்றனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கும்மிடிப்பூண்டி ரயில்  நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் அரிவாளுடன் தகராறில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் 2 தனிப்படைகளை அமைத்து சூலூர்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி வரும் மின்சார ரயில்கள், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் மின்சார  ரயில்களை தீவிரமாக காலை முதல் மாலை வரை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் சூலூர்பேட்டை இருந்து சென்னை நோக்கி மின்சார ரயில் நேற்று காலை எளாவூர் அருகே வந்தது. அப்போது, ரயில்வே போலீசார் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது எளாவூர் பகுதியை சேர்ந்த சுமன்  (18) என்பவரிடம் இரண்டு அடி அரிவாள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர், சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருவது தெரிந்தது. எனவே கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Student ,sickles ,Sulurpet ,Chennai ,
× RELATED நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடியை...