பாவூர்சத்திரம், மார்ச் 13: ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தை செயல்படுத்த நபார்டு வங்கி மூலம் ரூ.41.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணை பெற்றுக் கொடுத்த செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏவுக்கு விவசாயிகள் சங்கம் சார்பில் பாராட்டு விழா, பாவூர்சத்திரத்தை அடுத்த ஆவுடையானூரில் நடந்தது. ஓய்வுபெற்ற வேளாண்மை துறை அதிகாரி மகாராஜா தலைமை வைத்தார். ராமச்சந்திரன், தபேந்திரன், குத்தாலிங்கம், சிவன்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமரேசன் வரவேற்றார்.
கூட்டத்தில் 48 ஆண்டுகால கனவு திட்டமான ஜம்புநதி -ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுத்து நபார்டு வங்கி மூலம் ரூ.41.50 கோடி ஒதுக்கீடு பெற்று கொடுத்து அரசாணை வெளியிட்ட தமிழக முதல்வருக்கும், இதற்காக பாடுபட்ட செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏவுக்கும் அப்பகுதி குளத்து பாசன விவசாயிகள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்எல்ஏ ஏற்புரை ஆற்றினார். விழாவில் பத்மநாபபேரிகுளம் பாசன விவசாயிகள் சங்க தலைவர் நடராஜன், செயலாளர் செல்லப்பா, கைக்கொண்டார்குளம் பாசன விவசாயிகள் சங்க தலைவர் ஜான் செல்லையா, செயலாளர் சண்முகராஜ், நாராயணப்பேரி கால்வாய் பராமரிப்பு குழு தலைவர் தங்கையா, செயலாளர் சவுந்தரபாண்டியன், குற்றாலப்பேரிகுளம் பாசன விவசாயிகள் சங்க தலைவர் குத்தாலிங்கம், செயலாளர் ராஜசேகர், வெள்ளாளன் புதுக்குளம் பாசன விவசாயிகள் சங்க தலைவர் தமிழ்பாண்டி, செயலாளர் பரமசிவம் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு எம்எல்ஏவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மோகன் நன்றி கூறினார்.