×

கட்டி முடித்து மின் இணைப்பு கொடுக்காததால் 10 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் மகளிர் சுகாதார வளாகம்

* உடனே பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் வலியுறுத்தல்
* மணமை ஊராட்சி மலைமேடு கிராமத்தில் அவலம்

மாமல்லபுரம், மார்ச் 13: மாமல்லபுரம் அருகே மணமை ஊராட்சி மலைமேடு பகுதியில், கடந்த 10 ஆண்டுகளாக ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாக மையம் பூட்டியே கிடக்கிறது. இதனை, பெண்கள் பயன்பாட்டுக்கு உடனடியாக கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையை ஒட்டியுள்ள மணமை ஊராட்சியில், 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு கடந்த 10 ஆண்டுக்கு முன், கிராம பெண்கள் பயன்படுத்துவதற்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் 14 அறைகள் கொண்ட ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.

ஆனால், கட்டி முடித்து 10 ஆண்டுகளை கடந்தும், பயன்படுத்த முடியாதபடி பூட்டியே கிடக்கிறது. அப்பகுதி பெண்களின் பல ஆண்டு கோரிக்கையை தொடர்ந்து, சுகாதாரத்தை மையமாக வைத்து ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டு, பயன்படாமல் கிடப்பது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், அதிகாரிகள் கண்டும் காணாதது போல் மெத்தனமாக இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, இன்னும் அந்த சுகாதார வளாகதுக்கு மின் இணைப்பு கொடுக்கவில்லை.

மின் இணைப்பு கொடுத்தவுடன் இந்த சுகாதார வளாகம் திறக்கப்படும் என்றனர். எனவே, உடனடியாக மின் இணைப்பு பெற்று கட்டி முடிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருக்கும் சுகாதார வளாகத்தை பெண்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Womens Health Complex ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில்...