×

அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்: டிஐஜியிடம் வியாபாரிகள், பொதுமக்கள் வேண்டுகோள்

காஞ்சிபுரம், மார்ச் 13: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சரவணன் பணியிட மாற்றத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் காஞ்சிபுரம் சரக டிஐஜி தேன்மொழியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 12 ஆண்டுகளாக இன்ஸ்பெக்டர் சரவணன், சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவர் அந்த காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்ற பிறகு அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு, சாலை விழிப்புணர்வு, விபத்து தடுப்பு போன்ற பணிகளை சிறப்பாக செய்துகிறார்.

எங்கள் பகுதியை அமைதிப் பூங்காவாக மாற்றி, மக்களின் காவலராக செயல்படுகிறார். அனைத்து தரப்பு மக்களிடமும் அனுசரனையாகவும், சமரசமாகவும் செயல்பட்டு மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார். அச்சிறுப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் சுமார் 5  இடங்களில் பல்வேறு நிறுவனங்களின் பங்களிப்புடன் ₹8 லட்சம் செலவில் எச்சரிக்கை விளக்குகள், அச்சிறுப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 30 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதேபோல், அனைத்து வங்கி மேலாளர்களுடன் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடத்தினார். தனியார் நிறுவனங்களின் உதவியுடன் எங்கள் பகுதியில் விபத்துக்களை தடுக்க 25 பேரிகார்டுகள் அமைத்துள்ளார்.

இதுபோல் வேறு எந்த இன்ஸ்பெக்டரும் செய்யாத பணியினை எங்கள் பகுதியில் இன்ஸ்பெக்டர் சரவணன் செய்துள்ளார். அவரது சிறப்பான பணி எங்கள் பகுதியில் தொடர அந்த பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Inspector ,police station ,workplace change ,merchants ,DIG ,
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...