×

திருப்போரூர் பஸ் நிலையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக நடுரோட்டில் நிறுத்தப்படும் வேன்கள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்போரூர், மார்ச் 13: திருப்போரூர் பஸ் நிலையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக வேன்கள் நிறுத்தப்படுகின்றன. இதற்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. மாமல்லபுரத்தில் இருந்து பையனூர், ஆலத்தூர் வழியாக திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கத்துக்கு திருப்போரூர் பஸ் நிலையம் அருகில் இருந்து கேளம்பாக்கம், படூர், நாவலூர், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களுக்கும் தனியார் வேன்கள் இயக்கப்படுகின்றன. ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை மற்றும் திருப்போரூர், கேளம்பாக்கம் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளில் உள்ள பல்வேறு இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலர் இந்த வேன்களில் பயணம் செய்கின்றனர்.

இதையொட்டி காலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரை ஏராளமான வேன்கள் திருப்போரூர் பஸ் நிலையம் பகுதியில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. பஸ் நிலையத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றம், கோயம்பேடு, தாம்பரம், தி.நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், வெளியே செல்கின்றன. மேலும், மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள் பஸ் நிலையம் அருகே நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன. தனியார் வேன்கள், பஸ் நிலையம் அருகிலேயே நிறுத்தப்படுவதால், அரசு பஸ்கள் அங்கு நிற்காமல் தள்ளி நிறுத்தப்படுகின்றன. இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், தங்களின் சுமைகளை தூக்கிக் கொண்டு ஓட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மேலும், இந்த வேன்கள் அங்கு நிறுத்தப்படுவதால் பஸ்கள் சில நேரங்களில் நிறுத்தாமலே சென்று விடுகின்றன. இதனால், பஸ்களில் பயணிக்க காத்திருக்கும் பயணிகள் ஏமாறும் நிலை ஏற்படுகிறது.மேலும், வேன்களை இயக்குபவர்கள் ஒருவரையொருவர் போட்டி போட்டுக் கொண்டு சாலையின் குறுக்கே நிறுத்தி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். திருப்போரூர் போலீசார் அடிக்கடி வேன்களை பிடித்து அபராதம் விதித்தாலும், இந்த தனியார் வேன்களின் தொல்லை அதிகரிக்கிறதே தவிர முடிவுக்கு வரவில்லை.

இந்த வேன்களின் அடாவடி தனத்தால் அருகிலுள்ள பேரூராட்சி அலுவலகம், கூட்டுறவு கடை, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலகங்களின் உள்ளே பொதுமக்களும், அதிகாரிகளும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே, செங்கல்பட்டு சாலைப் போக்குவரத்து நிர்வாகம் இப்பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டு திருப்போரூர் பஸ் நிலைய பகுதியில் பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் இடையூறாக நிறுத்தப்படும் தனியார் வேன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : bus station ,Thirupporeur ,
× RELATED படகு இல்லம் செல்லும் சாலையோர தடுப்பில் வர்ணம் பூசும் பணி தீவிரம்