திருப்போரூர், மார்ச் 12: திருப்ேபாரூர் மீன் மார்க்கெட் அருகே அமைந்துள்ள உயர் கோபுர மின்கம்பத்தில் இருந்த மின் விளக்குகள் மாயமாகிவிட்டன. திருப்போரூர் பேரூராட்சியில் மீன் மார்க்கெட், பஸ் நிலையம், ரவுண்டானா, கந்தசுவாமி கோயில், வணிகர் தெரு, நான்கு மாடவீதிகள் உள்பட முக்கிய சந்திப்புகளில் உயர் கோபுர மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உயர் கோபுர மின்கம்பங்களிலும் 4 முதல் 6 மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மக்கள் புழக்கம் நிறைந்த பஸ் நிலையம், நான்கு மாடவீதிகள், வணிகர் தெரு, இள்ளலூர் சந்திப்பு ஆகிய இடங்களில் இந்த உயர் கோபுர மின் விளக்குகளின் பயன்பாடு முக்கியமானதாக உள்ளது.ஆனால், சில இடங்களில், மர்மநபர்கள் சிலருக்கு மது அருந்துதல் உள்பட பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு இந்த உயர் கோபுர மின் விளக்குகள் இடையூறாக இருந்தது. இதனால் அவர்கள், அதை உடைத்து எறிகின்றனர். அவ்வப்போது பேரூராட்சி நிர்வாகம் புதிய மின் விளக்குகளை பொருத்தியும், உடனடியாக அவை சமூக விரோதிகளால் உடைக்கப்படுகின்றன. சில இடங்களில் அவை திருடப்படுகிறது. இதையொட்டி பேரூராட்சி நிர்வாகம் புதிய விளக்குகளை பொருத்துவதில் சுணக்கம் காட்டி வருகிறது.
குறிப்பாக திருப்போரூர் மீன் மார்க்கெட் பகுதியில் இரவு 8 மணிவரை மீன் மற்றும் இறைச்சி ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது. இங்கு வரும் பொது மக்களின் வசதிக்காக பொருத்தப்பட்டு இருந்த உயர் கோபுர மின் விளக்குகள் உடைக்கப்பட்டு விட்டன. 6 மின் விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்த இந்த உயர்கோபுரத்தில், தற்போது ஒரே ஒரு மின் விளக்கு மட்டுமே எஞ்சியுள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம், சமூக விரோதிகளுக்கு எட்டாத வகையில் அதிக உயரத்தில் இந்த மின் விளக்குகளை அமைக்க வேண்டும். அதனை உடைப்பவர்களை கண்டறிவதற்கு, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, போலீசார் மூலம் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.