திருப்போரூர், மார்ச் 12: திருப்போரூர் கந்தசுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா நிறைவு விழாவில், திருக்கல்யாண கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் வீதியுலா வந்தார்.சென்னை அருகே உள்ள புகழ்பெற்ற முருகன் திருத்தலமான திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம். இந்த விழா, கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 5ம் தேதி, 8ம் தேதி சரவணப் பொய்கையில் தீர்த்தவாரி உற்சவம், தெப்ப உற்சவமும் நடந்தது. இதைத்தொடர்ந்து இறுதி நாள் நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மாலை வேடர்பரி உற்சவம் நடந்தது.இந்நிலையில், முருகப்பெருமான் வள்ளியை மணம் முடிக்கும் திருக்கல்யாண உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நேற்று நிறைவடைந்தது. இதையடுத்து நேற்று காலை தங்கமயில் வாகனத்தில் மணக்கோலத்தில் முருகன் வீதி உலா நடடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், புதுமண தம்பதிகள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.