×

சிமென்ட் பூச்சு உதிர்ந்த கம்பங்கள் சரிந்து விழும் அபாயத்தில் மின்சார டிரான்ஸ்பார்மர்

திருவள்ளூர், மார்ச் 12: திருவள்ளூர் அடுத்த பூண்டி பொன்னியம்மன் கோயில் அருகே, டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் மின் கம்பங்கள் பலவீனமாக உள்ளதால், அதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் அருகே  பூண்டி ஊராட்சி உள்ளது. இங்குள்ள பொன்னியம்மன் கோயில் அருகே ஊராட்சி முழுவதும் மின்சாரம் வழங்கும் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதன்மூலம் அப்பகுதி மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இபகுதியில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில், இந்த டிரான்ஸ்பார்மரை தாங்கி பிடிக்கும் மின் கம்பங்களில் சிமென்ட் பூச்சு உதிர்ந்து மிகவும் பலவீனமாக உள்ளன. மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு சில ஆண்டுகள் ஆனதால், எந்நேரமும் சரிந்து கீழே விழும் அபாய  நிலையில் உள்ளன. அவ்வழியாக செல்லும் வாகனங்கள் எதிர்பாராமல் லேசாக உரசினாலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்கள் பீதியுடனே சென்று வருகின்றனர். எனவே, இந்த டிரான்ஸ்பார்மரின் மின் கம்பங்களை உடனடியாக மாற்றி, புதிதாக மின் கம்பங்களை அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்