×

15 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்றவர்கணவன் சொத்தில் பங்கு கேட்டு மனைவி தற்கொலை முயற்சி: ஆலந்தூரில் பரபரப்பு

ஆலந்தூர்: 15 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்ற மனைவி கணவனின் சொத்தில் பங்கு கேட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் ஆலந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.ஆலந்தூர், கற்பக விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் லோகு (எ) லோகநாதன். இவரது மனைவி சசிகலா (48). எலக்ட்ரிக்கல் வேலையில் உரிய வருமானம் கிடைக்காததால், தற்போது லோகநாதன் வாட்ச்மேன் வேலை பார்த்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் குடும்பத் தகராறில் மனைவி சசிகலா பிரிந்து சென்றுவிட்டார். இதற்கிடையே, தனக்கு சொந்தமான இடத்தில் பாதியை விற்றுவிட்டு, மற்றொரு பகுதியில் 2 அடுக்குமாடி வீடு கட்டி லோகநாதன் வசித்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன் சசிகலா வீட்டுக்கு வந்து, லோகநாதனிடம் சொத்தில் பங்கு கேட்டு வாய்த் தகராறில் ஈடுபட்டார். பின்னர், அங்கேயே தங்கியிருந்து, தனக்கு பங்கு தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என லோகநாதனுக்கு மிரட்டல் விடுத்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை லோகநாதனின் வீட்டு மாடியில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி சுவற்றின் விளிம்பில் படுத்துக் கொண்டு, கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்வேன் என சசிகலா தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் பரங்கிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி, கிண்டி தீயணைப்பு நிலைய அதிகாரி விஜயராம் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் சசிகலாவை லாவகமாக பிடித்து, அங்கிருந்து கீழே கொண்டு வந்தனர். இதுகுறித்து பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : suicide ,estate ,Alandur ,
× RELATED கள் விற்றவர் கைது