×

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை புதுகை நகராட்சி பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி

புதுக்கோட்டை, மார்ச் 12: புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்விற்கு பின் கலெக்டர் தெரிவித்ததாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழக அரசு உத்தரவின்படி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 5 சதவிகித லைசால், 1 சதவிகித ஹைப்போ குளோரைடு கரைசல் கொண்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சி, 8 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நடமாடும் மருத்துவ குழுக்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மூலம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நோய் தடுப்பு நடவடிக்கையாக கைகளுவும் முறை பற்றி மாவட்டம் முழுவதும் இதுவரை 2 ஆயிரத்திதிற்கும் அதிகமான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.மேலும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவதன் மூலம் நோய் தொற்று பரவாமல் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிக அளவிலான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் கொரோனா குறித்து எவ்வித அச்சமும் அடைய தேவையில்லை, என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது மருத்துவத்துறை இணை இயக்குநர் சந்திரசேகரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Municipalities ,
× RELATED பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு பேரூராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு