திருச்சி, மார்ச் 12: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க திருச்சி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 12 படுக்கை வசதியுடன் அதிநவீன வார்டு தயாராகி விடும் என்று டீன் வனிதா கூறினார்.திருச்சியில் அரசு மருத்துவமனை டீன் வனிதா நேற்று அளித்த பேட்டி: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க திருச்சி அரசு மருத்துவமனை தயாராக உள்ளது. தற்போது 12 படுக்கை வசதிகள் கொண்ட தனி வார்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் 12 படுக்கை வசதிகளோடு கூடிய அதி நவீன வார்டு இன்னும் 15 நாட்களுக்குள் தயாராகி விடும். கூடுதலாக நோயாளிகள் வரும் பட்சத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் உள்ளது.
கோழிக்கறிக்கும், கொரோனா வைரசுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. கொரோனா பாதிப்பு என்ற சந்தேகத்தின் அடிப்படையில் திருச்சி அரசு மருத்துவமனையில் இதுவரை 9 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டனர். ஒருவர் மட்டும் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. கொரோனா குறித்து எந்த அச்சமும் தேவையில்லை. இது பருவ காலத்தில் சாதாரணமாக வரக்கூடிய நோய்தான். சரியான நேரத்தில் சிகிச்சை அளித்தால் குணமடைந்து விடுவார்கள். இது வேகமாக பரவக்கூடிய வைரஸ் என்பதால் கை கழுவுதல், இருமல், தும்மலின்போது முகத்தை மூடிக்கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் இந்த நோய் பரவாமல் தடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.