×

ரூ.14.94 கோடியில் புதிய வணிக வளாகம்

ஈரோடு, மார்ச் 12:ஈரோட்டில் ரூ.14.94 கோடி மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. ஈரோடு காளைமாடு சிலை பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் குடியிருப்பாக இயங்கி வந்த கட்டிடம் பாழடைந்து காணப்பட்டது. இந் நிலையில், ஈரோடு மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இங்கு ரூ.14 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் 4 தளங்கள் கொண்ட 62 கடைகளுடன் வணிக வளாகம் கட்ட அரசு நிதி ஒதுக்கியது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். எஸ்பி சக்தி கணேசன், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. ராமலிங்கம், கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. தென்னரசு ஆகியோர் பூமி பூஜையில் கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தனர். இதில், மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், உதவி கமிஷனர் சண்முகவடிவு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த வணிக வளாகம் கட்ட 18 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை