உளுந்தூர்பேட்டை, மார்ச் 12: உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது சேந்தமங்கலம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆபத்சகாயஈஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலை மத்திய அரசின் தொல்லியல்துறையின் சார்பில் புனரமைக்கும் பணி கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நடைபெற்று வருவதால் கிராமத்திற்கு செல்லும் வழியில் 100 மீட்டருக்குள் சாலை போடுவது, கல்வெட்டுகள் அமைப்பது உள்ளிட்ட கிராமத்தின் அடிப்படை வசதிகள் செய்வது தடை செய்யப்பட்டு உள்ளதால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், கோயிலுக்கு சொந்தமான இடங்களை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை மீட்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையினை வலி
யுறுத்தி கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது.
இது தொடர்பான சமாதான கூட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. தாசில்தார் காதர்அலி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து தொல்லியல்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உரிய வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். தனிநபர்களிடம் உள்ள இடம் குறித்து இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதில் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் ராமலிங்கம், சேந்தமங்கலம் சாமிதுரை, மணி, தெய்வக்கண்ணு, வாசுதேவன், குப்பன், கிராம நிர்வாக அலுவலர் சீனுவாசன், உதவியாளர் ராமராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.