சின்னசேலம், மார்ச் 12: கச்சிராயபாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த ஆலையில் அரவை பருவத்தின்போது சுமார் 300க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் ஷிப்ட் முறையில் வேலை செய்து வருகின்றனர். இதில் தற்காலிக பணியாளர்கள் மில் வளாகம் மற்றும் கரும்பு எடை போடும் இடம், கரும்பு இறக்கும் இடம் ஆகியவற்றில் வேலை செய்து வருகின்றனர்.
நிரந்தர பணியாளர்கள் மில்லின் உள்பகுதி மற்றும் அலுவலகத்தில் வேலைசெய்து வருகின்றனர். மேலும் வெல்டிங், பிட்டர்களுக்கும் தினக்கூலி பணியாளர்கள் உதவியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இரும்பு குழாய்களில் லீக்கேஜ் என்றால் இரவு நேரமானாலும் ஏறி அதை சரி செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் வேலையின்போது பாதுகாப்பு கவசம் போன்றவற்றை அணிந்து செல்வதில்லை.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு கூட இரவில் வெல்டிங் பணிக்கு சென்ற தினக்கூலி தொழிலாளி கீழே விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபோன்று நடக்கும் விபத்துகளை தொழிற்சாலைகளின் ஆய்வாளரும் கண்டு கொள்வதில்லை. அடிக்கடி சென்று ஆய்வும் செய்வதில்லை. இது சம்பந்தமான செய்தி தினகரன் நாளிதழில் வெளியானது. இதையடுத்து சர்க்கரை ஆலை வளாகத்தின் உள்ளே வேலை செய்யும் தொழிலாளர்கள் தலைகவசம், சேப்டி பெல்ட் அணிந்து பாதுகாப்புடன் வேலை செய்கிறார்களா என கண்காணிக்க தவறிய உதவி பொறியாளர் தனசேகர், பிட்டர் சரவணன் ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ஆலையின் நிர்வாக இயக்குநர் சிவமலர் உத்தரவிட்டார்.